அழகை ரசிப்பவன் நான். அதிலும் அழகான பெண்களை பார்க்கும்போது ரொம்பவே ரசிப்பதுண்டு. இதை பலமுறை நான் சொல்லி வந்திருக்கிறேன். நான் ரொம்ப வெளிப்படையான ஒரு மனிதன். ஆனால், எதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அதற்காக யாரைப் பார்த்தாலும் ஜொல்லு விடுவதா? இது நியாயமா?
ஒருத்தனுக்கு சாப்பாடே கிடைக்கவில்லை என்றால் அவன் மனம் சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருந்தால் அதில் எந்த தவறும் இல்லை. ஒருவனுக்கு ஆறுமாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையோதான் சாப்பாடு கிடைக்கிறது என்றால் அவனும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் தவறேதும் இல்லை. ஆனால், சாப்பாடு எப்பொழுதும் அருகே இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கும் ஒருவன் சாப்பாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், அது நியாயமா?
ஏன், என் மனது இவ்வளவு கேவலமாகிப் போனது? என் மனதில் ஏற்படும் அழுக்கை ஒங்கி ஒரு கத்தியால் குத்தி, கீறி சுத்தப்படுத்திக்கொள்ளவே இந்தப் பதிவு. மன அழுக்கு என்றவுடன் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பன் லீவிற்கு ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை பாண்டிச்சேரிக்கு கூப்பிடுவான். அரவிந்தர் ஆசிரமத்திற்கு தியானம் செய்ய கூப்பிடுகிறான் என நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் மிகத் தவறு. அவன் என்னைக் கூப்பிடுவது பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் நடக்கும் கேபரே டான்ஸை பார்ப்பதற்காக. "ஏண்டா, இதுக்கா என்னைக் கூப்பிடுற? இதெல்லாம் தேவையா? என்றால், " மாப்பிள்ளை, வருசம் முழுவதும் கடுமையா உழைக்கிறேன். எந்த தப்பும் செய்யறது இல்லை. ஆனாலும், மனசு முழுவதும் அழுக்கா இருக்கு. ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துட்டேன்னா, மனசுல உள்ள அழுக்கெல்லாம் போயிடும்" என்பான். ஆனால், அதைத் தவிர வேற எந்த கெட்ட செயலிலும் ஈடுபட மாட்டான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
சரி, விசயத்திற்கு வருகிறேன். நேற்று சன் டிவியில் " கண்டேன் காதலை" படத்தின் சில காட்சிகளில் தமன்னாவை பார்க்கும்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. தாவணியில் பார்க்கும் போது தமன்னா கொள்ளை அழகு. ஜொல்லு விட்டு ரசித்துக் கொண்டிருந்தவன், திடீரென அருகில் உள்ள என் பெண்ணைப் பார்க்கும் போது, சடாரென மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சரியாக இன்னும் ஆறு வருடத்தில், என் பெண்ணும் அதே உடைக்கு வரப் போகிறாள். பளாரென யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்தால் போல் ஆனது. ஆனால், எல்லாம் சில விநாடிகள்தான். பிறகு, ' அச்சமுண்டு, அச்சமுண்டு' சினேகாவை ஜீன்ஸ் டாப்ஸில், அப்புறம் இன்னும் சில நடிகைகள்........ என்ன தியானம், யோகா செய்து என்ன பயன்?
ஏன் அடுத்த நடிகையை/ அழகான பெண்களைப் பார்க்கும்போது இப்படி ஜொல்லு விட்டுப் பார்க்கிறேன். வயதானாலும் மனம் மட்டும் இன்னும் 16ஐ விட்டு வர மாட்டேன், என்கிறதே ஏன்?. வேறு எந்த தவறும் செய்வதில்லை. சும்மா பார்த்துத் தானே ரசிக்கிறோம் என்று நானே சமாதானம் செய்து கொண்டாலும், இது சரியா?. இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது?
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தானா என்ன? ஆண்களுக்கும் உண்டுதான் இல்லையா?
திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்? மனைவியைத் தவிர வேறு பெண்களை மனதால் கூட நினைக்கக் கூடாது என்கிறார்? அவ்வாறு வாழ்வது சாத்தியமா? அந்த அளவுக்கு ஒருவன் ஞானி போல் வாழ முடியுமா என்ன?
அழகை ரசிப்பது தவறில்லை என நினைக்கிறேன். அந்த அழகை அடைய நினைத்தால்தானே தவறு? அதற்காக டிவியோ, சினிமாவோ பார்க்காமல் இருக்க முடியுமா? மனித உடலே ரத்தமும், சதையும், நரம்பும் அடங்கிய பிணடம் என்று தெரிந்தும், பெண்கள் மேல் நாம் வைக்கும் ஆசை மட்டும் மாறுவதில்லையே ஏன்?
கெட்ட பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான் கெட்டவர்கள், மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற கூற்றை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்படி மனதில் சஞ்சலத்துடன் வாழ்வதற்கு கெட்ட பெண்களின் சகவாசம் எவ்வளவோ பரவாயில்லை தானே? ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு பெண் எப்போதும் கடவுளையே தரிசனம் செய்து கொண்டிருப்பவள். அவள் வீட்டின் எதிரே உள்ளவள், 'அந்த' தொழில் செய்பவள். சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மரணம் அடைந்து விடுகிறார்கள். மேல் உலகத்தில், கடவுள் பக்தி உள்ள பெண் நரகத்திற்கு போகிறாள். 'அந்த' பெண் சொர்க்கத்திற்கு போகிறாள். இது தெரிந்த கடவுள் பக்தி உள்ள பெண், கடவுளைப் பார்த்துக் கேட்கிறாள்:
" நான் நாள் முழுவதும் உங்களை பூஜித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இருப்பதோ நரகம். அவள் எப்போதும் அந்த தொழிலை செய்து கொண்டிருந்தாள், ஆனால் அவள் இருப்பது சொர்க்கம். ஏன் இந்த வேறுபாடு?"
கடவுள் இப்படி பதில் கூறினாராம்:
" நீ நாள் முழுவதும் என்னை பூஜித்தது மட்டுமல்லாமல், அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாய். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். யார் கூட இருப்பாள், என்று. ஆனால் அவளோ செய்யும் தொழில் தவறாக இருந்தாலும், தான் இந்த தொழில் செய்கிறோமே? இது தவறு இல்லையா? என் வருந்தி நாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் காரணம்"
ஒரு வேளை எனக்கும் நரகம் தான் கிடைக்குமோ????