அந்த நாளில் ஏற்பட்ட அந்த அதிர்வு இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. முதல் நாள் இரவு அதிக நேரம் விழித்து இருந்ததால் காலை எழுந்திருக்க தாமதமானது. என் அலுவலக நண்பர்தான் கைப்பேசியில் அலைத்தார்,
"உலக்ஸ், விசயம் தெரியுமா? சென்னை முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டதாம்"
ஊருக்கு போன் செய்தால் முதலில் குழப்பமே மிஞ்சியது. எங்கள் மாமனார் வீடு இருப்பது திருவாருரில். என் நண்பர் ஒருவர் வேளாங்கண்ணியிலிருந்து திருவாரூரை நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதாம்' என்று வேறு பயமுறுத்தினர். நான் உடனே போன் செய்து உடனே அனைவரும் திருச்சிக்கோ, லால்குடிக்கோ சென்று விடுங்கள் என்றேன். அவர்களோ எங்களைப் பற்றி கவலைப்படத் தொடங்கினர். கொடுமையான நிமிடங்கள் அவை.
எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தூக்க கலக்கம் வேறு. ஒருவாறு புரிந்து கொண்டபோதுதான் அதன் தீவிரம் தெரிந்தது. அடுத்த ஒரு மணி நேரமும் தொலைக்காட்சியிலும், இண்டர்நெட்டிலும் செய்தியை படித்த பிறகு மனம் முழுவதும் சோகம் அப்பிக்கொண்டது. அதற்கு முன் சுனாமி என்றால் என்ன ? என்று எனக்குத் தெரிந்திருக்க வில்லை. பிறகு தொடர்ந்து இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியது. அப்போதுதான் தெரிந்தது மலேசியாவிலும் சுனாமி வந்ததும், இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவிலும் உணரப்பட்டதும். இது எதுவுமே நாங்கள் இருக்கும் இடத்தில் எங்களால் உணர முடியாமல் போனது. மலேசியாவில் பினாங்கிலும், லங்காவியிலும் சிலர் இற்ந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோது மனம் இறுக்கமானது.
எங்காவது குண்டு வெடிப்போ அல்லது ஏதாவது இயற்கை பேரிடரோ நடந்திருந்தால், உடனே நாம் முன்பு அங்கே போயிருந்த நாட்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. அதே போல்தான் எனக்கும் நான் மெரினா பீச், வேளாங்கண்ணி, பினாங்கு பீச், லங்காவி பீச்சுகளில் இருந்த நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. நேரம் ஆக ஆக மக்கள் சாவு எண்ணிக்கை அதிகமான போது கண்கள் குளமானது.
அடுத்த நாள் அருகில் உள்ள கோலா தெரங்கானுவில் அமைச்சர் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து அங்கு செல்ல கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அடுத்த நாள் நானும், என் அலுவலக நண்பரும் போகும் போது என் கண்கள் மட்டும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேர மீட்டிங்கில் ஒரு மணி நேரம் எல்லோரும் சுனாமியைப் பற்றித்தான் பேசினார்கள். திரும்பி வரும்போது அருகில் உள்ள பீச்சில் காரை நிறுத்தினேன். உடன் வந்த நண்பர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். கடலில் சிறிது தூரம் நடந்து அந்த கடலையே வெறித்துப்பார்த்தேன். கடல் மிக அமைதியாக இருந்தது. அலைகள் என் கால்களை இதமாக தொட்டுத் தொட்டு வருடிச் சென்றது. இவ்வளவு அமைதியான கடலா ஆக்கரோசமாய் என் மக்களைத் தின்றது? என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அந்த கடல் அலையைப் பார்த்து கன்னா பின்னா என்று திட்டித் தீர்த்தேன். ஆனால், அந்த அலையோ 'நான் அப்படிச்செய்ய வில்லை' என்று மீண்டும் என் கால்களை வருடிச்சென்றது.
இருந்தாலும் கோபத்துடன் முறைத்துப் பார்த்து அதனை கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தேன்,
"இவ்வளவு சாந்தமான நீயா அவ்வளவு கோபமாக சுனாமியாக வந்தாய்? உனக்கு இந்த அளவு கோபம் வரக் காரணம் என்ன? உன்னைக் கோபப் படுத்தியது யார்? எது? கடல் நீருக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம்தான் காரணம் என்றால், உன் கோபத்தை கடல் நீருக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டியது தானே? எதற்கு ஒன்றும் தெரியாத என் அப்பாவி மக்களிடம் உன் வீரத்தைக் காட்டுகிறாய்?"
நண்பர் என்ன நினைத்தாரோ உடனே ஓடி வந்து என்னை கையைப் பிடித்து காருக்கு அழைத்துச் சென்றார். உடனே காரில் ஏறிவிட்டேன். இல்லையென்றால், கடலிடமும், அலையிடமும் கோபமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னை பைத்தியம் என்று எண்ணக்கூடிய ஆபத்து அப்போது இருந்ததால் உடனே காருக்குள் சென்றுவிட்டேன். ஆனாலும், கோபம் இருந்து கொண்டே இருந்தது. இருக்கிறது இன்னும்.
அன்று இரவு தொலைக்காட்சியில் இறந்தவர்களை பார்க்கையில் எதுவுமே ஓடவில்லை. நிறைய குழந்தைகள் இறந்திருந்தார்கள். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி இருப்பது கடற்கரை ஓரத்தில். இந்தியாவிலிருந்து போன் செய்து உடனே அந்த பள்ளியிலிருந்து பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றச்சொன்னார்கள். இருப்பதே ஒரே ஒரு இண்டர்நேஷனல் பள்ளி. அதை விட்டால் வேறு பள்ளி கிடையாது. ஆனாலும் நம் மனதைப் பாருங்கள்! உடனே நம் பிள்ளைகளை மட்டும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமாம். என்ன ஒரு சுயநலம். ஆனாலும், சுனாமி எங்கள் ஊரில் வந்திருந்தால், அந்த பள்ளி அருகே வந்திருந்தால்... அதைப் பற்றி நினைத்தால் அனைத்து இரவுகளுமே தூக்கமில்லா இரவுகள் ஆகிறது.
ஆண்டவன்... அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்குமேயானால், அவரிடம் அல்லது அதுவிடம் "ஏன் இப்படி மக்களை கொத்து கொத்தாக பழி வாங்குகிறாய்? என்ன காரணம்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்" என்று பல கேள்விகள் கேட்க மனசு துடிக்கிறது
சரி, என்ன காரணமாக இருக்க முடியும்? எல்லாவற்றுக்குமே விதிதான் காரணம் என்றால், விதி முடிந்தவர்கள் எல்லோரும் ஒன்றாக கடற்கரையில் வசித்தார்களா என்ன? சுனாமி பாதித்த பகுதிகளில் வாழும் மக்களிடம் பேசினால் ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கிறது. அந்த சோகத்தை முற்றிலுமாக மறந்து அவர்கள் வாழ ஆண்டவன்தான் அருள் புரியவேண்டும்.
ஆண்டவன் இருப்பதாக நம்புகிறேன். அதனால், என் வாழ்நாளுக்குள் இது போன்ற இன்னொரு இயற்கை பேரிடரை நான் பார்க்க நேரக் கூடாது என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். சுனாமியால் அன்று இறந்த அனைத்து ஆன்மாக்களும் இன்னொரு பிறப்பெடுத்து மீண்டும் ஒரு நல்ல வாழ்வை வாழ அவர்கள் நினைவுதினமான இன்று ஆண்டவனை வேண்டுகிறேன். சுனாமியால் சொந்தங்களை இழந்து வாடும் என் சகோதர சகோதரிகள் அந்த நிகழ்வை மறந்து நல்லபடியாக சந்தோசமாக வாழக்கூடிய மன நிலையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவனை கெஞ்சுகிறேன்.
7 comments:
நல்ல பதிவு
நல்ல வரிகள்
கடைசி பத்தியை வழிமொழிகிறேன்
\\நான் அந்த கடல் அலையைப் பார்த்து கன்னா பின்னா என்று திட்டித் தீர்த்தேன். ஆனால், அந்த அலையோ 'நான் அப்படிச்செய்ய வில்லை' என்று மீண்டும் என் கால்களை வருடிச்சென்றது. //
சூப்பர் வரி தலைவரே .. அந்த நிகழ்வுகளை டிவியில் பார்க்கும் போது எல்லாம் கஷ்டமா இருக்கு ..
//நல்ல பதிவு
நல்ல வரிகள்//
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பாலாஜி.
//கடைசி பத்தியை வழிமொழிகிறேன்//
நன்றி பரிசல்.
//சூப்பர் வரி தலைவரே .. அந்த நிகழ்வுகளை டிவியில் பார்க்கும் போது எல்லாம் கஷ்டமா இருக்கு ..//
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரோமியோ.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'மறக்க முடியாத அந்த நாள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th December 2009 09:25:03 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/159498
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment