எங்கள் நிறுவனத்தின் லோன் விசயமாக ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன். இது நடந்து ஒரு நான்கு மாதங்கள் இருக்கும். அங்கே ஒரு மேனஜரை சந்தித்தேன். அவர் ஒரு மலேசியன். சிலரை பார்த்த உடனே பிடித்துவிடும் அல்லவா? அப்படிப்பட்ட முகம் அவருடையது. முகம் மட்டும் அல்ல. அவர் பேசும் விதம் மற்றும் அவரின் அணுகுமுறை எல்லாம் எங்களுக்கு பிடித்துவிட்டது. அது மட்டுமல்லாமல் இந்தியாவைப் பற்றி நிறைய தெரிந்தவர். திடீரேன ஒரு ஹிந்தி பாடலை பிரமாதமாக பாடினார். வீடு முழுவதும் ஹிந்தி பாடல்கள் சிடி நிறைய வைத்திருப்பதாக கூறினார். அந்த அளவுக்கு ஹிந்தி பாட்லகள் மேல் அவருக்கு வெறி. வேலையிலும் கில்லாடியானவர். அவருடன் ஒரு மூன்று நான்கு முறை சாப்பிட சென்றிருப்பேன்.
எப்போதும் ஒரு புன்னகையுடனே பேசுவார். எல்லாவிதமான சப்ஜக்ட்டும் பேசுவார். திடீரென ஒரு நாள் ஒரு போட்டாவை காண்பித்து இது யார் தெரியுமா? என்று கேட்டார். "உங்கள் பையனா?" என்றேன். "இல்லை" என்றார்.
"பின் யார் இது?" என்றேன்.
"என்னுடைய சிறு வயது போட்டோ" என்றார்.
நம்ப முடியவில்லை. ஒரு சினிமா ஹீரோ போல் இருந்தார். அப்போது அவர், "நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு நிறைய தோழிகள் உண்டு. எப்போதும் என்னைச் சுற்றி பெண்கள்தான்" என்று சொல்லி அவரின் மலரும் நினைவுகளை அவிழ்த்துவிட்டார்.
பொறுமையாக கேட்ட நான், "இப்போதும் அப்படித்தானா?" என்றேன்.
"இப்போது அப்படி இல்லை. என் மனைவிக்கு கட்டுப்பட்டவன். எனக்கு இரண்டு பையன்கள், ஒரு பெண். அதனால் இப்போது அதெல்லாம் தோன்றுவதில்லை. சந்தோசமாக இருக்கிறேன். எனக்கு எல்லாம் இருக்கிறது. ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குறை இருக்கிறது" என்று முதல் மரியாதை சிவாஜி ஸ்டைலில் சொன்னார்.
நான், "அப்படி என்ன குறை?" என்றேன்.
"தினமும் கார்டனில் நிறைய நேரம் செலவு செய்கிறேன். இரவு பப்புக்கு சென்று கரோக்கியில் பாட்டு பாடுகிறேன். நிறைய பணம் இருக்கிறது. மனைவி வீட்டை கவனித்துக்கொள்கிறார். பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். பையனுக்கு விரைவில் கல்யாணம்"
"அப்புறம் என்னதான் சார் பிரச்சனை?"
"அதான் தெரியவில்லை"
"சார், எதுவும் இல்லை என்றால் அதை நோக்கி நம் வாழ்க்கை செல்லும். எல்லாம் இருப்பதால் உங்களை தனிமை வாட்டுகிறது என்று நினைக்கிறேன். மனைவியோடு அதிகம் வெளியே செல்லுங்கள். தனியாக இருக்காதீர்கள். நான் உங்களுக்கு யோகா சொல்லித் தருகிறேன்" என்றேன்.
"நிச்சயம் ஒரு நாள் கற்றுக்கொள்கிறேன்" என்றார்.
பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் தலைமை அலுவலகம் எங்கள் லோன் பேப்பரை ரிஜெக்ட் செய்துவிட்டது. அதற்காக போன் செய்தவர் மிகவும் சோகமாக, "சார், நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் கிடைக்காமல் போய்விட்டது" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.
அடுத்த வாரம் அவர் பேங்கை கடந்து செல்கையில் அவரை தொலைபேசியில் அழைத்தேன். நலம் விசாரித்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு அழைத்தேன். ரொம்பவும் தயங்கி பின் வர ஒப்புக்கொண்டார்.
"சாப்பிட வர அப்படி என்ன தயக்கம்?" என்றேன்.
"இல்லை, என்னால் உங்கள் கம்பனிக்கு லோன் வாங்கி தர முடியவில்லை. அதனால் உங்களுடன் சாப்பிட வர வெட்கமாக இருக்கிறது" என்றார்.
"சார், இப்போது உங்களை நான் அழைத்திருப்பது நண்பர் என்பதன் அடிப்படையில்" என்று சொல்லி அழைத்து சென்றேன்.
அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அவரை தொலைபேசியில் அழைத்தேன். சில விபரங்களை கேட்டேன். அப்போது அவரே சில வழிமுறைகளை சொல்லி, "மீண்டும் நீங்கள் எங்கள் வங்கிக்கே லோன் அப்ளை செய்யுங்களேன்" என்றார்.
"சரி" என்று சொல்லி அதற்கான வேலைகளில் இறங்கினேன். ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அவசர பயணமாக திருச்சி சென்றேன். செல்லும் முன் அவரை அழைத்து பேசினேன். "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்ததும் சந்திக்கலாம்" என்றார்.
ரம்ஜான் முடிந்து மலேசியா வந்ததும் அவரை தொலை பேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
பதில் வந்தது இப்படி,
"My Father has passed away last week"
படித்தவுடன் மனசு சங்கடப்பட, அவரைப் பார்த்து ஆறுதல் சொல்ல பேங்கிற்கு செல்ல முயன்றேன். நண்பருக்கு 54 வயது. எப்படியும் அவர் அப்பாவுக்கு 75 வயதிற்கு மேல் இருக்கும். இருந்தாலும் அப்பா அப்பாத்தானே, அதனால் பார்த்துவிட்டு வரலாம் என்று மீண்டும் அவருக்கு 'எப்போது அவர் ஃபிரியாக இருப்பார்' என்று தெரிந்து கொள்ள போன் செய்தேன்.
எடுத்தது அவரின் பெண். அவரை கூப்பிட சொன்னேன்.
அந்த பெண் உடனே இப்படி பதில் சொன்னார்,
"My Father has passed away last week"
என் இதயம் சுக்கு நூறாகி போனது. அடுத்த வாரம் அவர் பையனுக்கு கல்யாணம்.
ஆண்டவா ஏன் இப்படி?
8 comments:
ஆண்டவா ஏன் இப்படி???
நீங்கள் உயிருடன் வாழப்போவதை சிந்திப்பதை விட (வருகின்ற) மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
---நபிகள் நாயகம்
http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2844
இந்த மிக சிறு இடைவெளியில நாம போடுற ஆட்டம் தான் என்ன!!
நல்ல பதிவு.
மனசை நெகிழ வைக்கிறது.
//இராஜராஜேஸ்வரி said...
ஆண்டவா ஏன் இப்படி???// வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
//Mohamed said...
நீங்கள் உயிருடன் வாழப்போவதை சிந்திப்பதை விட (வருகின்ற) மரணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
---நபிகள் நாயகம்// வருகைக்கு நன்றி மொகமட்.
// Ravisankaranand said...
இந்த மிக சிறு இடைவெளியில நாம போடுற ஆட்டம் தான் என்ன!!// நன்றி ரவிசங்கற்.
Rathnavel said...
நல்ல பதிவு.
மனசை நெகிழ வைக்கிறது. வருகைக்கு நன்றி ரதனவேல் சார்.
Post a Comment