இந்த சந்தோசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட உணர்ச்சியில் இருக்கிறேன். இந்த வார ஆனந்த விகடன் "என் விகடனில்" திருச்சி எடிஷனில் என்னுடைய வலைப்பூவின் அறிமுகம் வந்துள்ளது. நேற்று நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். நண்பர் ரவிச்சந்திரன் சோமுவின் உதவியாலும், நண்பர் நந்தகுமாரின் உதவியாலும் நேற்று இரவுதான் என்னால் படிக்க முடிந்தது. ஆனந்த விகடனின் ரீச்சே தனிதான். நிறைய நண்பர்கள் தொலை பேசி வாயிலாகவும், மெயில் மூலமாகவும் விசாரிக்கிறார்கள். வெளி நாட்டில் வசிக்கும் லால்குடியை சேர்ந்த நண்பர்கள் ஆன்லைனில் ஆனந்த விகடனைப் படித்து விட்டு என்னை வாழ்த்துகிறார்கள். என்னைக் கொண்டாடுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் ஏழாவது படிக்கும் போதுதான் ஆனந்தவிகடன் எனக்கு அறிமுகமானது என்று நினைக்கிறேன். முதலில் அப்பாவுக்குத் தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன். பின் கல்லூரி படிக்கையில்தான் சுதந்திரமாக படிக்க முடிந்தது. அப்பா அனைத்து புத்தகங்களும் வாங்குவார். நாங்கள் கதைகளைப் படித்து படிப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சிறுவயதில் எங்களை பாடப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்களை படிக்க விடமாட்டார். ஆனால் நாங்கள் எப்படியாவது அப்பாவுக்குத் தெரியாமல் படித்துவிடுவோம். கல்லூரி படிக்கையில் யார் முதலில் ஆனந்த விகடனை படிப்பது என்பதில் பயங்கர போட்டி இருக்கும். என் மாமா ஒருவர் வீட்டிற்கு வந்தால் அவர் கிளம்பும் போது ஆனந்த விகனை எடுத்து சென்றுவிடுவார். அப்போதுதான் புத்தகம் வந்திருக்கும். ஆனாலும் எடுத்து சென்றுவிடுவார்.
வெகு நாட்கள் கழித்துதான் இந்த விசயத்தை நான் கண்டு பிடித்தேன். அதிலிருந்து நான் என்ன செய்வேன் என்றால், மாமா வந்தவுடனே ஆனந்த விகடனை எடுத்து மறைத்து வைத்துவிடுவேன். அவர் கேட்டால் புத்தகம் இன்னும் வரவில்லை என்று சொல்லி விடுவேன். அத்தனை வெறி எல்லோருக்குமே ஆனந்தவிகடனின் மேல் இருக்கும். அப்படிப்பட்ட பத்திரிகையில் நம் எழுத்து வராதா? என்று ஏங்கிய காலங்கள் உண்டு. அதன் காரணமாக 1985களில் நிறைய துணுக்குகள், கேள்விகள் எழுதி அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பினேன். அப்போது என் எழுத்துக்கள் ஆனந்த விகடனிலும் வந்ததுண்டு. பின் நிறைய கதைகள் எழுதி அனுப்பினேன். எல்லாமே திரும்பி வந்துவிட்டது. பின் நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
ஏற்கனவே முன் எழுதியிருந்தபடி, பல வருட இடைவெளிக்கு பின் 2009 எழுத ஆரம்பித்தவுடன், ஒரு கதை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அந்தக் கதை பிரசுரமானது. ஆனால் அது முழுகதையாக வராமல் ஒரு பக்கக் கதையாக வந்தது. அன்றிலிருந்து இன்று வரை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், "எப்படியாவது ஆனந்த விகடனில் ஒரு ஐந்து பக்க கதை வர வைக்க வேண்டும் என்று" நிச்சயம் என் ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.
நான் நினைக்கும் அளவிற்கு ஒரு கதை ஆனந்த விகடனில் வந்தவுடன், என் அடுத்த ஆசை என்னவாக இருக்கும் என்றால், எப்படியாவது ஆனந்த விகடனில் "நானும் விகடனும்" பகுதியில் நானும் எழுத வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். நிச்சயம் அந்த ஆசையும் ஒரு நாள் நிறைவேறும்.
"முதலில் நம்பிக்கை வைப்போம். பின் முயற்சிப்போம். அதன் பின் அதன் இலக்கை அடைவோம்"
என் கனவு நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிற நம்பிக்கையோடு மீண்டும் ஒரு முறை என் வலைப்பூவை அறிமுகப்படுத்திய ஆனந்த விகனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.