யாருக்கு எப்ப என்ன நடக்கும்? யாருக்குத்தெரியும்? ஓரளவுதான் நாம ஜாக்கிரதையாக இருக்கலாம். அதையும் மீறி நடப்பது விதியாகத்தான் இருக்கக் கூடும். ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாத முடிவில் மலேசியாவில் நிறைய விபத்துக்கள் நடக்கும். நிறைய இளைஞர்கள் உயிர் இழப்பார்கள். அரசாங்கம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் யாரும் மெதுவாகச் செல்வதில்லை. அதுவும் மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் மிக வேகமாகச் செல்வார்கள். தினமும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ''இன்று விபத்தில் இறந்தவர்கள் இத்தனை பேர்" என்று அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். பார்க்க பார்க்க நம் மனம் துடிக்கும். இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுவும் மழைக்காலங்களில் மலேசியாவில் கார் ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். சில நேரங்களில் மழை மிக அதிகமாக இருக்கும். பகலிலேயே நம்மால் முன்னால் எதையும் பார்க்க முடியாது. அதுவும் எதிரில் கார் வந்தால் அந்தக் காரினால் அடிக்கும் தண்ணீர் நம் கார் கண்ணாடியில் பட்டு சில விநாடிகள் எதுவுமே தெரியாது. நேற்று அப்படித்தான். கடுமையான மழை. மிகவும் மெதுவாகத்தான் சென்றேன். மிகப்பெரிய பாலம் வேறு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகள் வைத்திருப்பாரள். அடித்த மழையில் அனைத்தும் நடு ரோடில். எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் முன்னால் எதுவுமே தெரியவில்லை. ஹெட் லைட்டை ஆன் செய்து ஹை பீமில் வைத்தால் கூட எதுவுமே தெரியவில்லை. நாம் எவ்வளவு கவனமாகச் சென்றாலும், பின்னாடி வருபவர் கவனமாக வரவில்லை என்றால் என்ன ஆவது? வீடு போய்ச் சேருவதற்குள் படாதபாடு.
இந்தப் பிரச்சனையையாவது ஓரளவு நம்மால் கட்டுப்படுத்த முடியும். போன வாரம் மலேசியா 'மிரி' என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை அறிந்தால், எப்படிப் பயம் வராமல் இருக்க முடியும்?
வெள்ளி இரவு 7.30 மணி. Air Asia A320 விமானம் சரவாக், மிரியில் இருந்து கோலாலம்பூர் புறப்படத் தயாராக உள்ளது. கேப்டன் எல்லாவிதமான அறிவிப்புகளையும் முடித்து விட்டு, விமானத்தை நின்ற இடத்தில் இருந்து எடுத்து ரன்வேக்கு செல்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் விமானம் புறப்படத் தயாராக இருக்கிறது. அப்பொழுது ஒரு பயணி எழுந்திருக்கிறார். உடனே எல்லாப் பயணிகளும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் விமானம் ரன்வேயில் இருக்கும் போது, அதுவும் புறப்படத் தயாராக இருக்கும் போது யாரையும் எழுந்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். விமானப் பணிப்பெண்களும் அவர்கள் இருக்கையில் சேஃப்டி பெல்ட்டுடன்தான் இருப்பார்கள். அப்போது ஒருவர் எழுந்தால் என்ன ஆகும்? விமானப் பணிபெண்கள் பதறி அடித்துக்கொண்டு எழுந்து வந்து அவரை இருக்கைக்குச் செல்ல சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் கேட்காமல் வேகமாக நடந்திருக்கிறார். சில பயணிகளும் தடுத்திருக்கிறார்கள். அப்படியும் கேட்காமல் வேகமாக நடந்து சென்று, யாரும் எதிர்பாராதவிதமாக விமானத்தின் அவசர கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்து விட்டார். எல்லோரும் செய்வது அறியாது திகைத்திருக்கிறார்கள். பின் விசயம் தெரிந்து விமானத்தை விமானி நிறுத்திவிட்டார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து மிரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். உடம்பு எல்லாம் மல்டிபிள் ஃப்ராக்சர் ஆகி, அந்த நபர் இப்போது படுத்த படுக்கையில். பின் விமானம் ஐந்து மணி நேர தாமத்துடன் கிளம்பி இருக்கிறது.
விசயம் இத்தோடு முடிந்திருந்தால் இந்த விசயத்தை எழுதி இருக்க மாட்டேன். ஆனால், இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், அவன் விமானத்தை விட்டு குதிக்கும் முன் கத்தினானாம், என்ன சொல்லித்தெரியுமா? "ஐய்யோ பேய் இருக்கிறது. பேய் இந்த விமானத்தில் இருக்கிறது"
என்ன கொடுமை பாருங்கள். இப்பொழுது மலேசியா ஃபேஸ்புக் முழுவதும் இந்த விசயம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மலேசியாவில் பேய் பிசாசை நம்புவர்கள் மிக அதிகம். அவனுக்கு வயது 24தான். தனது காதலியுடன் விடுமுறையைக் கழிக்கக் கோலாலம்பூரில் இருந்து மிரி சென்றுள்ளான். என்னத்தைப் பார்த்தோனோ தெரியவில்லை? பேய் பார்த்து பயந்து கீழே விழுந்து இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறான். போலிஸ் என்ன சொல்கிறது என்றால், அவன் 'ஒரு டிரக் அடிக்ட் ஆக இருக்கலாம், ஏனென்றால் அவன் தன்னிலையிலேயே இல்லை' என்று. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்?
என் கவலை எல்லாம், 'ஒரு வேளை, விமானம் கிளம்பியதும் அவன் எமெர்ஜன்சி கேட்டை திறந்திருந்தால்..?' நினைக்கவே பயமாக இருக்கிறது.
இனி விமானம் டேக் ஆகும் முன் யாராவது எமெர்ஜன்சி கேட் முன் நடந்து போகிறார்களா? என்று நான் அடிக்கடி பார்க்கப்போவது நிச்சயம்.
எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது பாருங்கள்!